சென்னை கோயில்கள்
‘வெறும் ஒரு கல்லை நட்டு வைத்து, அதை தினமும் குளிப்பாட்டி, மஞ்சளும் குங்குமம் வைத்துத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், நாளடைவில் அந்தக் கல் அபாரமான சக்தி பெற்று விடுகிறது!’ என்கிறார் நாத்திகவாதியான பேராசிரியர் கோவூர். இந்த நிலையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான... ஏன் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பக்தியுடன் வணங்கிச் செல்லும் நமது கோயில்களின் மகத்துவம் எப்படிப்பட்டது என்று யோசியுங்கள்! நம் அரசர்கள் தங்களுக்காகக் கட்டிக் கொண்ட மாடமாளிகை மற்றும் அரண்மனைகளை விட, ஆண்டவனுக்காகக் கட்டிய ஆலயங்களாலேயே வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். உலகின் பிற நாடுகளில் உள்ள ஆலயங்கள் மக்கள் வழிபடும் அல்லது வேண்டிக் கொள்ளும் புனிதமான ஒரு பகுதி... அவ்வளவுதான். ஆனால், நமது ஆலயங்கள் அவற்றிலிருந்தெல்லாம் அடிப்படையிலேயே வேறுபடுகின்றன. அவை இந்திய ஆன்மிக ஒளியை உலகுக்கு அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கங்கள். பண்டைய நாட்களில் நமது இலக்கியங்களை & குறிப்பாக பக்தி இலக்கியங்களைப் பாதுகாத்துப் பராமரித்தவை நமது நாட்டு ஆலயங்களே. ஊருக்குள் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தவையும் ஆலயங்களே. இவற்றால் கோயில் என்றதும் நம்மையும் மீறி ஒரு வித மரியாதை ஏற்பட்டது. அத்துடன் அவற்றுக்கு உள்ளிருந்து அருள் பாலிக்கும் ஆராதனா மூர்த்திகளின் மீது பக்தியும் ஏற்படுவதால், நமது ஆலயங்களுக்கு மகத்தான சக்தி இருப்பதை எவரும் மறுக்க முடியாது! அதுவும் எத்தனை தலைமுறைகளாக இந்தச் செயல் தொடர்ந்து வருகிறது! உலகில் கோயில் இல்லாத ஒரு நாடோ அல்லது ஒரு பகுதியோ உண்டா என்ன! அந்த அளவுக்குக் கோயில்கள் மனித வாழ்க்கையுடன் ஒன்றிக் கலந்து விட்டிருக்கின்றன. எப்படிப்பட்ட மனத்தையும் ஆறுதல்படுத்தும் வல்லமை இத்தகைய கோயில்களுக்கு உண்டு. இந்தப் புத்தகத்தில் சென்னை நகரில் உள்ள குறிப்பிடத் தக்க பதினான்கு கோயில்கள் பற்றியும் அதன் சிறப்புகள் குறித்தும் விவரிக்கிறார் நூலாசிரியர் பி.சுவாமிநாதன். ஆன்மிக தாகத்தில் தவிக்கும் அன்பர்களுக்கு, இதிலுள்ள தகவல்கள், நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமே இல்லை!