ஆலய தரிசனம்
'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பார்கள். அந்தக் காலத்தில் கோயிலை வைத்துத்தான் ஊரே நிர்மாணிக்கப்பட்டிருக்கும். வளமான மனங்களை உருவாக்க, ஓர் ஊருக்கு முதலில் தேவை கோயில்தான் என்று அன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெளிவாகவே புரிந்திருக்கிறது. இதற்கேற்ப நம் பண்டைய அரசர்கள் கோயில்களையும் ஆலயங்களையும் கட்டுவதற்குத் தாராளமாகவே நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... மன்னர்களே மண் சுமந்து கட்டிய ஆலயங்களும் நம் தமிழகத்தில் உண்டு! அத்தகைய புகழ்வாய்ந்த ஆலயங்களைத் தரிசனம் செய்வதற்கே பெரும் பேறு செய்திருக்க வேண்டும். இறைவனே அவதரித்து உருவாக்கிய ஆலயங்கள், ரிஷிகள் ஸ்தாபித்த ஆலயங்கள், சித்தர்கள் நிர்மாணித்த ஆலயங்கள், மன்னர்கள் செதுக்கிய ஆலயங்கள் என்று ஓர் ஆலயத்தின் வரலாற்றை அறியப் போனால் ஆயிரம் கதைகள் தெரிய வரும். சிற்பிகளின் உளி பேசும் உன்னத ஆலயங்களின் ஒளி நம்மைத் திகைக்க வைக்கும். காலங்கள் எத்தனையோ கடந்தும் நம் கலாசாரத்தின் பெருமையையும், புகழையும் பறைசாற்ற ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த ராஜகோபுரங்கள் இன்றும் என்றும் இதற்கு சாட்சி!